நான் மோடியை பற்றி பேசவில்லை-சோனியா காந்தி
டெல்லி: மரணத்தின் வியாபாரி என நான் குறிப்பிட்டது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அல்ல என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.
குஜராத்தில் பிரசாரத்தில் பேசிய மோடி போலி எண்கெளன்டரில் சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசியதற்காக அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து, சோனியா காந்தி நவ்சரி என்ற இடத்தில் பேசும் போது மரணத்தின் வியாபாரி (மவுத் கா சவ்தாகர்) என்று பேசினார். ஒரு முதல்வர் குறித்து சோனியா மிகத் தவறாகப் பேசிவிட்டதாக தேர்தல் ஆணையரிடம் பாஜக புகார் கொடுத்தது.
இதையடுத்து சோனியாவுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு பதிலளித்துள்ள சோனியா காந்தி,
நான் மரண வியாபாரி என்று குஜராத் நிர்வாகத்தைத் தான் சொன்னேன். எந்தவொரு தனிப்பட்ட நபரையும் நான் குறிப்பிட்டு அந்த வார்த்தையை சொல்லவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதே போல காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் பிரசாரத்தின் போது மோடியை இந்து தீவிரவாதி என்று பேசியிருந்தார். இது குறித்து விளக்கம் அளிக்க அவர் இன்று தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு எழுத்து மூலம் விளக்கம் அளித்தார்.