குடிகார கணவனை கொலை செய்த மனைவி சரண்
உடன்குடி: குடிகார கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி இரவோடு இரவாக போலீசில் சரண் அடைந்தார்.
தூத்துக்குடி, மெஞ்ஞானபுரம் டிகேசி நகரை சேர்ந்தவர் பவுல்-ரெஜினா தம்பதியினருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். மூத்த மகனுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
கூலி வேலை பார்த்து வரும் பவுலுக்கு கடந்த 15 ஆண்டுகளாக குடிபழக்கம் இருந்து வந்தது. எப்போதும் போதையிலேயே மிதக்கும் அவர், அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தார்.
தினமும் இதே நிலை நீடிக்கவே ரெஜினா கணவரின் குடிபோதை தொல்லையிலிருந்து விடுபட முடிவு செய்தார். இந்நிலையில் பவுல் வழக்கம் போல் குடித்து விட்டு சாப்பாடு கேட்டுள்ளார்.
ரெஜினா பரிமாறிய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, என்ன சாப்பாடு செய்திருக்கிறாய், உன் சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது என்று கூறி அவரை அடித்து உதைத்து விட்டு போதையில் படுத்து தூங்கிவிட்டார்.
கணவரின் தொடர் சித்வதைக்குள்ளான ரெஜினா வீட்டில் இருந்த நைலன் கயிறை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த பவுலின் கழுத்தில் போட்டு இறுக்கியவுடன் அவர் சில நிமிடங்களிலேயே இறந்தார்.
அதன்பிறகு அங்கிருந்த வெளியேறிய ரெஜினா நேராக மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு வந்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.
போலீசார் ரெஜினாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவரை, மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.