மாணவர்களை மதம் மாற வலியுறுத்திய ஆசிரியை சஸ்பெண்ட்
கரூர்: கரூர் மாவட்டம் மஞ்சபுளியம்பட்டி கிராமத்தில், மாணவ, மாணவிகளை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்திய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள மஞ்சள் புளியம் பட்டியில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பாரதி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது வகுப்பில் படித்து வரும் மாணவ, மாணவியர்களை குறிப்பிட்ட மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், மாணவ, மாணவிகளிடம் பொட்டு வைக்காதே, பூ வைக்காதே, விபூதி பூசாதே என்று மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட பாஜக தலைவர் சிவமணிக்குத் தெரிய வந்தது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட பாஜகவினருடன் சிவமணி பள்ளிக்கு வந்தார்.
அவர்களுடன் மாணவ, மாணவியரின் பெற்றோர்களும் சேர்ந்து அனைவரும் சாலை மறியலில் குதித்தனர். மத மாற்றத்திற்கு வலியுறுத்திய ஆசிரியை பாரதியை உடனே நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
தகவல் அறிந்த தோகமலை சப் - இன்ஸ்பெக்டர் திரவியநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் ஆசிரியையை நீக்கும் வரை போராட்டத்தை விட மாட்டோம் என பாஜகவினர் கூறி விட்டனர்.
இதையடுத்து கல்வித் துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி ராமசாமி விசாராணை மேற்கொண்டார். விசாரணையைத் தொடர்ந்து ஆசிரியை பாரதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஒரு தலித் அமைப்பை சேர்ந்த சிலர், ஆசிரியை பாரதியை சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மாவட்ட கலெக்டர் முன்பு தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர். இதனால் மஞ்சபுளியம்பட்டி கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications