அரசு கிட்டங்கியில் இருந்து கடத்தப்பட்ட ரேசன் அரிசி பறிமுதல்
மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசு கிட்டங்கியில் இருந்து கடத்தப்பட்ட 1,065 மூட்டை ரேசன் அரிசியை குடிமைப் பொருள் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் கூடல்நகரை அடுத்துள்ள பாசிங்காபுரம், குமாரம் பகுதிகளில் தனியார் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி மூட்டைகளை 2 வாரங்களுக்கு முன்னர் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில் மீண்டும் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தனிப்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் மதுரையை அடுத்துள்ள ஐராவதநல்லூர் அருகேயுள்ள தனியார் அரிசி ஆலையில் திடீர் சோதனை நடத்தியதில் மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் அரசு கிட்டங்கியில் இருந்து தான் எடுத்து வரப்பட்டது கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
இந்த கிட்டங்கியிலிருந்து பாலீஷ் செய்ய அரிசி மூட்டைகளை தனியார் அரிசி ஆலைக்கு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்ததை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.
லாரியில் ஏற்றப்பட்டிருந்த 511 மூட்டை ரேசன் அரிசியும், 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் தனியார் அரிசி ஆலையில் பாலீஷ் செய்யப்பட்ட 554 ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட 1065 மூட்டை ரேசன் அரிசியையும் அரசு கிட்டங்கிக்கு கொண்டு சென்றனர். இந்த கடத்தல் தொடர்பாக லாரி டிரைவர் தங்கச்சாமி, கிளீனர் கார்த்திக் மற்றும் கடத்தல் ஏஜென்டுகள் விஜயன், அயூப்கான், சுமை தூக்கும் தொழிலாளிகள் ராமன், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
தனியார் அரிசி ஆலையின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த அரிசி கடத்தலுக்கு அரசு கிட்டங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்களும், ரேசன் கடை ஊழியர்களும் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டால் இதுவரை எங்கெங்கு அரிசி கடத்தப்பட்டது என்பது தெரியவரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.