நாயைக் கடித்துக் குதறிய முதியவர் - மருத்துவமனையில் அனுமதி
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே வெறி பிடித்த நாய்க்கும், 65 வயது முதியவருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இறுதியில் ஊர் மக்கள் சேர்ந்து அந்த நாயை அடித்துக் கொன்று முதியவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மனிதனை நாய் கடிப்பது சாதாரண விஷயம். ஆனால் நாயை மனிதன் கடித்தால் அது செய்தி. அப்படி ஒரு சம்பவம், கேரள மாநிலம் கொல்லம் அருகே நடந்துள்ளது.
கொல்லம் அருகே உள்ள பகக்கடவு கிராமத்தில் ஒரு வெறிநாய் ஊர் மக்களை மிரட்டி வந்தது. இதனால் ஊர் மக்கள் பீதியுடன் காணப்பட்டனர்.
இந்த நிலையில் பப்பன் (65) என்பவரது வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த அந்த வெறிநாய் அங்கிருந்த வாத்து ஒன்றைக் கவ்விக் கொண்டு ஓடியது.
இதைப் பார்த்ததும் கோபமடைந்தார் பப்பன். இந்த நாய்க்கு இன்று ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்ற வெறியுடன் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் நாயைத் துரத்தினார்.
ஒரு சாக்கடைக்கு அருகே வைத்து நாயை மடக்கிப் பிடித்த பப்பன், நாயுடன் கடுமையாக சண்டையிட்டார். இதைப் பார்த்ததும் ஊர் மக்கள் கூடி விட்டனர்.
நாய்க்கும், பப்பனுக்கும் இடையே நடந்த சண்டை படு பயங்கரமாக இருந்தது. பப்பனின் ஒரு கையை நாய் பலமாக கவ்வியுள்ளது. அதை விடுவிப்பதற்காக, நாயின் தொண்டையில் பலம் கொண்ட மட்டும் அழுத்தமாக கடித்துள்ளார் பப்பன். ஒரு கட்டத்தில் பப்பனின் கடி தாங்க முடியாமல் நாய் கையை விட்டு விட்டது.
பப்பன் கடித்ததால், நாயின் தொண்டையிலிருந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதற்கு மேலும் வேடிக்கை பார்த்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்த ஊர் மக்கள் ஆளுக்கு ஒரு கல்லாக எடுத்து, நாயை அடித்து கொன்றனர்.
பின்னர் பப்பனை மீட்டு உள்ளூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வெறி பிடித்த நாயைக் கடித்ததாலும், நாய் பப்பனைக் கடித்ததாலும், அவருக்கு ரேபிஸ் வர வாய்ப்புள்ளது என்பதால் அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு உள்ளூர் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து பப்பன் அங்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications