காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை - கடல் கொந்தளிப்பு

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்திருந்தது. சென்னை நகரில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளதால் 2 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் நல்ல மழை இருக்கும் எனவும் பெரும்பாலான பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காவிரி மாவட்டங்களில் பலத்த மழை:
இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகியவற்றில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் அது பலத்த மழையாக மாறியுள்ளது.
இதன் காரணமாக 3 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில், 135 மில்லிமீட்டர் மழையும், சீர்காழியில் 130 மில்லிமீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 129 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
நாகப்பட்டனம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கோடியக்கரையில் மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகே 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications