முஷாரப் மீது பாக். மக்கள் கடும் வெறுப்பு: கருத்துக் கணிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அதிபர் பதவியில் நீடிப்பதை பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் விரும்பவில்லை. மேலும், அவரது ஆதரவு பெற்ற கட்சியையும் அவர்கள் அடியோடு வெறுப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
வாஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச குடியரசுக் கழகம் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 67 சதவீதம் பேர் முஷாரப் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளனர். 56 சதவீதம் பேர் ஆட்சி நிர்வாகத்தில் ராணுவம் எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வாக்களிப்போம் என 30 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்கு 25 சதவீதம் பேரும், 23 சதவீதம் பேர் முஷாரப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ பிரிவு) கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முஷாரப்புக்கும், பெனாசிருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தவறானது. இனிமேலும் அப்படி ஏற்படக் கூடாது என்று 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெனாசிர், நவாஸ் ஷெரீப் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சேர்ந்து மாபெரும் கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்துக்கு 58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான வாக்களர்கள் நாட்டின் தற்போதைய நிலை குறித்து கோபத்துடன் உள்ளதும், முஷாரப் மீது வெறுப்புடன் இருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கு பேர் மட்டுமே முஷாரப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பெனாசிரும், நவாஸ் ஷெரீப்பும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்காவிட்டால், ஜனவரி மாதம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications