அழகிரி, ஸ்டாலின் இணைந்து செயல்பட வேண்டும்: வைரமுத்து

திருநெல்வேலி: கடிகார முட்கள் போல மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து இருவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லையில் நடந்து வரும் திமுக இளைஞர் அணி மாநாட்டில், நேற்று இரவு நடந்த காவியக் கலைஞர் 84 ஒலி - ஒளிக் காட்சியின்போது வைரமுத்து பேசினார்.
அவர் பேசுகையில், அழகிரியும், ஸ்டாலினும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வைரமுத்து பேசுகையில், எனக்கு இப்போது இரண்டு பிரமிப்பு. ஒன்று இந்த கலைஞர் காவியக் கண்காட்சி. இரண்டாவது, ஸ்டாலின் ஆற்றிய மாநாட்டுப் பணிகள்.
இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இளைஞர்கள். தமிழகத்தில் இன்று நடைபெறும் திமுக பேரணிக்காக 50சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்துள்ளனர்.
சீனத்தில் நடந்தது சிவப்புப் புரட்சி. இன்று நெல்லையில் நடந்துள்ளது வெள்ளைப் புரட்சி.
கலைஞர் 14 வயதில் கொடி பிடித்தார். 23 வயதில் வசனம் எழுதினார். 29 வயதில் தண்டவாளத்தில் படுத்துப் போராட்டம் நடத்தினார். 45 வயதில் முதல்வர் பதவியை பிடித்தார். இந்தியாவிலேயே குறைந்த வயதில் முதல்வர் பதவியைப் பிடித்தவர் கலைஞர்தான்.
நெல்லை மண்ணில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., பாரதி போன்ற தலைவர்கள் பிறந்துள்ளனர். அதற்காக மட்டும் இந்த மண்ணில் மாநாட்டை நடத்த முடிவு செய்யவில்லை. தமிழகத்தில் உள்ள தொன்மையான நதிகள் தமிழகத்தில் பிறக்கவில்லை. ஆனால் தாமிரபரணி மட்டும்தான் தமிழகத்திலேயே பிறந்து தமிழக மக்களை வாழ வைக்கிறது. இதனால்தான் இங்கு இளைஞர் அணி மாநாட்டை நடத்த தேர்வு செய்துள்ளனர்.
தமிழக மக்களுக்காக கருணாநிதியும், ஸ்டாலினும் ரத்தமும், வேர்வையும் சிந்தி உழைத்து வருகின்றனர். தினசரி 18 மணி நேரம் உறங்காமல் தமிழக மக்களுக்காக உழைத்து வருகிறார் கருணாநிதி. தமிழகத்தில் எப்போதும் விழிப்போடு செயல்படும் ஒரே தலைவர் கருணாநிதிதான்.
லட்சியமுள்ள மாநாட்டுக்கு என்னைப் பேச அழைத்த ஸ்டாலினுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் ஸ்டாலின், அழகிரிக்கு ஒன்று கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இருவரும் கடிகாரத்தில் உள்ள முட்கள் போல இணைந்து செயல்பட வேண்டும். இருவரும் கடிகாரம் போல இருக்க வேண்டும். சின்ன முள், பெரிய முள் இல்லை என்றால் காலம் காட்ட முடியாது. சின்ன முள் நிதானமாக செயல்படும், பெரிய முள் வேகமாக செயல்படும்.
கருணாநிதியும், ஸ்டாலினும் நூறாண்டுகள் வாழ வேண்டும். தான் வாழும்போது தன்னைச் சார்ந்தவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்று கூறினார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications