குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி: 4 எக்சிட் போல்கள் கணிப்பு
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும். அதேசமயம் கடந்த முறையை விட இம்முறை மிகக் குறைவான மெஜாரிட்டியுடன் தான் மோடி ஆட்சியைப் பிடிப்பார் என தேர்தலுக்குப் பிந்தைய 4 எச்சிட் போல் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
குஜராத்தில் நேற்று 2வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியின.
இந் நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் மீண்டும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
இம் மாநில சட்டசபையில் 182 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க 91 இடங்கள் தேவை.
இந் நிலையில் என்டிடி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 90 முதல் 110 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 70 முதல் 95 இடங்கள் வரை கிடைக்கலாம்.
சிஎன்என்-ஐபிஎன், இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 92 முதல் 100 இடங்கள் வரையிலும், காங்கிரஸுக்கு 77 முதல் 87 இடங்கள் வரையும் கிடைக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் நியூஸ் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 103 இடங்களும், காங்கிரஸுக்கு 76 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கு 93 முதல் 104 இடங்கள் வரையும், காங்கிரஸுக்கு 75 முதல் 87 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து டிவி கருத்துக் கணிப்பிலும் பாஜகவுக்கு சாதகமான கருத்து வெளிபட்டிருந்தாலும் கூட, கடந்த முறைய இம்முறை பாஜகவுக்கு இடங்கள் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டசபையில் பாஜகவுக்கு 127 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 23ம் தேதி எண்ணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications