வேன்-கார் மோதலில் 3 திமுக தொண்டர்கள், 2 ஐயப்ப பக்தர்கள் பலி
கும்பகோணம்: கும்பகோணம் அருகே நடந்த சாலை விபத்தில் திமுக தொண்டர்கள் 3 பேர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
திமுக இளைஞர் அணி மாநாடு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடந்து முடிந்தது. இதில் பங்கேற்றுவிட்டு மயிலாடுதுறையைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் வாகனங்களில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை திமுக தொண்டர்கள் சென்ற வேன் கும்பகோணம் அருகே புதுச்சேரியிலிருந்து அய்யப்ப பக்தர்களுடன் வந்த கார் மீது வேன் நேருக்கு நேர் மோதியது.
இதில் மயிலாடுதுறை கடலங்குடி திமுக பஞ்சாயத்து தலைவர் தியாகராஜன்(45), திமுக தொண்டர் பாலு (35), வேன் டிரைவர் சுதாகர்(25) ஆகியோரும், காரில் வந்த அய்யப்ப பக்தர்கள் முத்துப்பாண்டி(45) மற்றும் கார் டிரைவர் பார்த்தசாரதி(50) ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் வேனில் வந்த திமுக தொண்டர்கள் 10 பேரும், காரில் வந்த அய்யப்ப பக்தர்கள் 5 பேரும் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிதியுதவி அறிவிப்பு:
சாலை விபத்தில் இறந்த திமுக தொண்டர்கள் 3 பேர் உட்பட 5பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.