சிங்கள அரசுக்கு இந்தியா முட்டுக்கொடுப்பதா - திருமாவளவன்
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா, சிங்கள அரசுக்கு முட்டுக் கொடுப்பது மிகப்பெரும் கேலிக் கூத்து என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
அரசியல் நேர்மையில்லாத, பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாத இனவெறி பிடித்த சிங்கள அரசின் வான் படையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு வலிய வலிய வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்வது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.
பாகிஸ்தான் சிங்கள இனவெறிக் கும்பலுக்கு பல வகையிலும் உதவிகள் செய்வது போன்று, இந்திய அரசும் போட்டி போட்டிக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஓரே அணியில் நின்று கொண்டு சிங்கள அரசுக்கு முட்டுக் கொடுப்பது மிகப் பெரும் கேலிக் கூத்தாக உள்ளது.
தமிழ்நாட்டு மீனவத் தமிழர்களை அவ்வப்போது சுட்டுக் கொன்று இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் சிங்கள அரசு ஈடுபட்டு வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதிலேயே இந்திய அரசு முனைப்பாக உள்ளது. இந்திய எல்லைக்குள் வாழும் சுமார் 6 கோடி தமிழர்களின் உணர்வுகளை துளி கூட பொருட்படுத்தாமல் இழிவுபடுத்தும் வகையில் இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்குவதில் சிங்கள இனவெறியர்களை விட இந்தியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தான் இன்று (17ம் தேதி) இந்திய தரை மற்றும் வான் வழி படையின் வல்லுநர் குழு ஒன்று கொழும்பு செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் எதிரான இந்திய அரசின் இத்தகைய போக்கு மிகவும் வேதனைக்குரியதும், கண்டிக்கத்தக்கதாகும்.
இது தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நேரிலே சந்தித்து தமிழினத்திற்கு எதிரான செயல் திட்டத்தோடு புறப்பட்டிருக்கும் இந்திய ராணுவ வல்லுநர் குழுவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்த வேண்டும்.
மேலும், சிங்கள இனவெறியர்களின் வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சிங்கள அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் இந்திய அரசை வற்புறுத்துகிறோம்.
சிங்கள இனவெறியர்கள் வான்வழித் தாக்குதலை நிறுத்தினால் தான் விடுதலைப்புலிகளும் வான் வழித் தாக்குதலை நிறுத்தும் சூழல் உருவாகும்.
ஆகவே சிங்கள அரசின் வான்படையை மேம்படுத்த வேண்டுமென்கிற முயற்சியை கைவிட்டு வான் வழித் தாக்குதலை கைவிட வலியுறுத்துவதுடன் சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிங்கள வான் படைத் தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாகவும், நூலிழையில் உயிர் தப்பியிருப்பதாகவும் சிங்கள அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் ஆதாரம் இல்லாத செய்திகளை பரப்பி தமிழர்களிடையே பெரும் பதட்டத்தையும், குழப்பத்தையும் உருவாக்க முயற்சித்து வருகின்றன.
இதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப் படுத்தி விட முடியும் என்பது சிங்கள வெறியர்கள் கனவு கண்டு வருகின்றனர். சிங்கள அரசின் இத்தகையை கனவை நனவாக்குவதற்கு இந்திய அரசு துணை நிற்க போகிறதா அல்லது இந்திய நாட்டைச் சார்ந்த 6 கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க போகிறதா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
எனினும் எமது ஜனநாயக உணர்வுகளை இந்திய அரசு மதிக்கும் என்கிற நம்பிக்கையோடு கொழும்பு சென்றுள்ள இந்திய ராணுவ வல்லுநர் குழுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.