ஸ்டாலினுக்கு கட்சியை நடத்தும் தகுதி உண்டு-அன்பழகன்
கன்னியாகுமரி: ஸ்டாலினுக்கு கட்சியை நடத்தும் தகுதி உள்ளது என நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ளார்.
நெல்லையில் 2 நாட்கள் நடந்த மாநில திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்ட நிதியமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் கன்னியாகுமரி வந்தார். இன்று காலை அங்கு நிருபர்களிடம் அவர் கூறியதாவது
இந்த இளைஞரணி மாநாட்டால் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் லட்சிய உணர்வை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாநாடு அமைந்திருந்தது.
திமுகவில் மாற்றம் வருமா என பத்திரிக்கைகள் கேள்வி எழுப்புகின்றன. பாதை ஒன்றுதான், கருணாநிதி தான் எல்லாம். அவர் வழிகாட்டுதலின்படி தான் திமுக நடைபோடும். ஸ்டாலினுக்கு கட்சியை நடத்தும் தகுதி உள்ளது என்றார்.
காங்கிரசுடன்தான் கூட்டணி என்று பாமக கூறியுள்ளதே என்று கேட்டதற்கு, அவர்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்கள். இதில் நாங்கள் என்ன சொல்ல முடியும் என்றார்.
தொண்டர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல்:
இளைஞரணி அணிவகுப்பு ஊர்வலத்தில் மயங்கி விழுந்த தொண்டர்களை அமைச்சர் பொன்முடி மருத்துவமனையில் பார்த்து ஆறுதல் கூறினார்.
நெல்லையில் நடந்த திமுக மாநாட்டு பேரணியில் கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த மணிமுத்து என்ற திமுக தொண்டருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. விழுப்புரம் நாகராஜன் என்பவருக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டது.
இருவரையும் கட்சி நிர்வாகிகள் அவரை பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதே போல் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தே சேர்ந்த நடேசன் என்ற தொண்டரும் ஊர்வலத்தில் மயங்கி விழுந்தார். அவரும் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களை அமைச்சர்கள் பொன்முடி, எ. வேலு, டி.பி.எம் மைதீன்கான், மாவட்ட திமுக பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன், செஞ்சி அவைத் தலைவர் மாஸ்தான் ஆகியோர் இன்று மருத்துவமனையில் பார்த்து ஆறுதல் கூறினார்.
மாநாட்டு மேடையில் திடீர் திருமணம்:
இதற்கிடையே நெல்லை திமுக மாநாட்டு மேடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திருமணம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக தொண்டர் அன்பழகன், ரேவதி ஆகியோருக்கு திருமணத்தை அமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மாநாடு மேடையில் அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மணமக்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
அல்வா வியாபாரம் விறுவிறுப்பு:
நெல்லை திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் திரண்ட கூட்டத்தால் அல்வா கடைகள் காலியாயின.
நெல்லையில் குவிந்த தொண்டர்கள் பிரசித்த பெற்ற நெல்லை அல்வாவை வாங்க கடைகளில் திரண்டனர். லாலா கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு நெல்லை ஜங்ஷன் பகுதி அல்வா கடைகளில் அல்வா முழுமையாக விற்று தீர்த்தது. இதனால் அல்வா கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications