தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பதா-ஜெ கேள்வி

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் முதல்வர் கருணாநிதியை, தீவிரவாதம் தொடர்பான முதல்வர்கள் மாநாட்டுக்கு மத்திய அரசு அழைத்திருக்கக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கருணாநிதி வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறார். அப்படிப்பட்டவர், தீவிரவாதத்தை எதிர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ள முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தகுதியற்றவர் ஆவார்.
இந்தக் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்வது அவமானச் செயலாகும். கருணாநிதி கலந்து கொள்வது தவறு என்றால், மத்திய அரசு அவருக்கு அழைப்பு விடுத்தது அதை விடப் பெரிய தவறாகும். இந்த மாநாட்டுக்கு கருணாநிதியை மத்திய அரசு அழைத்திருக்கக் கூடாது.
நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்கவும், ஒடுக்கவும் பொடா சட்டம்தான் சரியானதாகும். எனவே பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு, பொடா சட்டத்தை ரத்து செய்து விட்டது. இதனால் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாட ஆரம்பித்து விட்டனர்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக திமுக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்துக்களை முதல்வர் கருணாநிதிதான் வெளியிட்டுள்ளார்.
எனவே உடனடியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications