சிறுதாவூர் நிலம்: விசாரணைக் கமிஷன் அமைத்தது செல்லும்!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் பங்களா அமைந்துள்ள சிறுதாவூரில், தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை அருகே உள்ள சிறுதாவூரில் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் ஆடம்பர சொகுசுப் பங்களா உள்ளது. இந்த பங்களா தனக்குச் சொந்தமானதில்லை என்று ஜெயலலிதா முன்பு கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த பங்களா உள்ள இடம் தலித் மக்களுக்கு அண்ணா ஆட்சிக்காலத்தில் இலவசமாக வழங்கப்பட்டது. இதை ஆக்கிரமித்து விட்டனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தலித் மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியன் தலைமையிலான விசாரணைக் கமிஷனை திமுக அரசு நியமித்தது.
இந்த நிலையில் விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது தொடர்பான அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரான டி.சித்ரா என்பவர் ரிட் மனு தாக்கல் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், விசாரணைக் கமிஷன் சட்டப்படி மாநில அரசோ அல்லது மத்திய அரசோதான் விசாரணைக் கமிஷனை அமைக்க முடியும். ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பொதுத்துறை ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைப்பது தொடர்பான அரசு ஆணையைப் பிறப்பித்துள்ளது.
விசாரணைக் கமிஷன் அமைப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவில்லை. அதில் கமிஷன் அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படவில்லை.
மாறாக, சட்டசபை விதி 110ன் கீழ் அறிக்கை வாசிக்கப்பட்டு, விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது சட்டவிரோதமானது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுதாரர் சார்பில் அதிமுக வழக்கறிஞர் ஜோதி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யாயா, சுகுணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசை எதிர்த்து ஜனார்த்தன ரெட்டி தொடர்ந்த இதுபோன்ற விசாரணைக் கமிஷன் வழக்கில், சட்டசபையில் முதல்வர் கொடுத்த உறுதிமொழிக்கேற்ப விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டதாக ஆந்திர அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
இந்த வழக்கிலும் சட்டசபையில் அளித்த அறிக்கைப்படி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதில் சட்டவிரோதமானதாக கருத எதுவும் இல்ைல என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
அப்போது அதிமுக வக்கீல் ஜோதி, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும், தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை இருப்பதால், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரினார்.
இதையடுத்து ஜனவரி 25ம் தேதி வரை மனுதாரருக்கு அவகாசம் கொடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications