ராஜபாளையத்தில் அதிமுக கவுன்சிலர்கள் விடிய விடிய போராட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகரசபை தலைவர் ரத்தினம்மாள் தலைமை வகிக்க, துணைத் தலைவர் மணிகண்ட ராஜா முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் முருகேசராஜா எழுந்து, அதிமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் மணிகண்டராஜா அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டதால் கூட்டத்தை ஒத்திவைப்பதாக கூறி விட்டு நகர சபை தலைவர் ரத்தினம்மாள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.
ஆனால் நகரசபை தலைவர் ரத்தினம்மாள் தொடர்ந்து கூட்டத்தை நடத்தவேண்டும் என்றும், தீர்மானம் எதுவும் நிறைவேற்றாமல் வெளியே சென்றதை கண்டித்தும் அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் நகர சபை உள்ளே இருந்து கொண்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த சந்திரா எம்எல்ஏ மற்றும் தாசில்தார் ஆதிநாராயணன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் அவர்கள் சமாதானம் அடையவில்லை.
மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இல்லையெனில் இந்த போரட்டத்தை எக்காரணம் கொண்டும் கைவிட மாட்டோம் என்று அதிமுக கவுன்சிலர்கள் கூறினர். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.
இந் நிலையில் அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.