கருணாநிதி இரங்கல் கவிதை தனிப்பட்ட விஷயம்-மொய்லி
சென்னை: முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்று காங்கிரஸ் மேலிட தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி கவிதை எழுதினார்.
அது விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியிலும் சில தலைவர்கள் குறை கூறுகிறார்கள்.
அது சரியல்ல. அந்த கவிதை தமிழ்செல்வன் என்ற தனி மனிதருக்காக கருணாநிதி எழுதியது அவ்வளவுதான். அது அவரது தனிப்பட்ட விஷயம். அதை வைத்துக் கொண்டு அவர் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார் என்று சொல்லிவிட முடியாது.
ஒரு சிறிய நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு பொதுவான ஒரு முடிவை எடுக்கக் கூடாது. முதல்வர் கருணாநிதி எப்போதும் விடுதலைப் புலிகளை ஆதரித்தது இல்லை. அந்த இயக்கத்தை ஆதரித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார்.
இதுபற்றி எந்த குழப்பமும் அடைய தேவையில்லை. இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் இயக்கமான விடுதலைப் புலிகள் எங்கள் பாசத்துக்குரிய தலைவர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தனர். இதை காங்கிரஸ் கட்சியால் ஒரு போதும் மன்னிக்க முடியாது. இதில் கருணாநிதிக்கு மாறுபட்ட கருத்து இருக்கும் என்று காங்கிரஸ் நினைக்கவில்லை.
திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே உள்ள உறவில் எந்த உரசலும், விரிசலும் இல்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டு தொடர்பாக அரசு நடத்திய விசாரணை திருப்தியாக உள்ளது.
2006ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு வேண்டும் என்று எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றாலும் தேர்தலில் திமுக தனி பெரும்பான்மை பெறாததால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூறுகிறார்கள். இதுபற்றி காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையும் தான் முடிவு செய்ய வேண்டும்.
சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் தாக்கப்பட்டதற்கு தென் மாநிலங்களில் கட்சி அமைப்புகளை மாற்றி அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் தான் காரணம். அமைப்புகள் மாற்றி அமைக்கப்படும் போது எல்லோருக்கும் உரிய இடம் வழங்கப்படும். அதன் பிறகு இது போன்ற உள்கட்சி மோதல்களுக்கு வாய்ப்பு இருக்காது.
கட்சியின் மாநில அமைப்புகளில் ஒழுங்கீனமாக நடக்கும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் கட்சி மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களுக்கு செல்லும்போது கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று தொண்டர்களுடன் கலந்து பேச வேண்டும் என்று சோனியாகாந்தி அறிவுறுத்தியுள்ளார் எனறார் வீரப்ப மொய்லி.