பள்ளி கழிவறைக்கு பூட்டு போட்ட ஆசிரியர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை
கோயம்புத்தூர்: பள்ளி கழிவறைக்கு பூட்டு போட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்தில் உள்ள காந்தி நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இங்கு கோவை மாவட்ட கலெக்டர் நீரஜ் மிட்டல் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளியில் கழிப்பறை வசதி இருந்தும் மாணவ மாணவியர், வளாகத்துக்கு வெளியே சிறுநீர் கழித்து வந்துள்ளனர். மேலும், கழிப்பறையை பள்ளியின் தலைமை ஆசிரியர் பூட்டி வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பாதுகாப்பு இல்லாமல் மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததையும், சாலையின் குறுக்கே அவர்கள் ஓடிக் கொண்டிருந்ததையும் கவனிக்காத 2 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ-மாணவியர்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கவும், வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியே செல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும் தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.