தர்மபுரி பஸ் எரிப்பு: 3 அதிமுகவினருக்கு அடுத்த மாதம் தூக்கு
கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.
இந்த வழக்கில் முதலில் அதிமுகவினரை போலீசார் கைது செய்யவில்லை. கடும் எதிர்ப்பு கிளம்பவே 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தர்மபுரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையை முடக்க ஆளும் தரப்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.
வழக்கையே திசை திருப்பும் முயற்சியில் போலீசாரும் அதிமுகவினரும் செயல்படத் துவங்கினர். இதையடுத்து இறந்த கோகிலவாணியின் தந்தை வழக்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரினார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம் அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வழக்கை சேலத்துக்கு மாற்றியது.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது குற்றவாளி ஒருவர் இறந்தார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 28 பேர் மீது விசாரணை நடந்தது.
இதில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மீதமுள்ள 25 பேருக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் தூக்கு தண்டனை பெற்ற 3 குற்றவாளிகள் உட்பட 28 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இது தொடர்பாக கடந்த 6ம் தேதி நடைபெற்ற விசாரணையில் 28 பேரின் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்ததுடன், அவர்களின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இைதத் தொடர்ந்து சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் இந்த குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறைக்கு ஒரு வாரண்டை அனுப்பியுள்ளார். அதில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 3 பேரையும் 2008 ஜனவரி 10ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் கோவை சிறையில் நடந்து வருகின்றன.













Click it and Unblock the Notifications