புதிதாக வாங்கிய காரில் சென்ற 5 பேர் விபத்தில் சிக்கி பலி
ஈரோடு: புதிதாக வாங்கிய காருக்கான பணத்தைக் கொடுக்க அந்த காரில் பயணம் செய்த ஐந்து பேர் அரசுப் பேருந்துடன் கார் மோதியதில் பரிதாபமாக இறந்தனர்.
ஈரோட்டைச் சேர்ந்தவர் ஜெகன்னாதன். இவர் கோவையில் சமீபத்தில் ஒரு புதிய கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். அதற்கான பாக்கிப் பணத்தைக் கொடுப்பதற்காக தனது நண்பர்கள் ஈஸ்வரமூர்த்தி, சுந்தரமூர்த்தி, சக்திவேல், கரூர் சங்கர் ஆகியோருடன் புதிதாக வாங்கிய காரில் கோவைக்குக் கிளம்பினார்.
கார், மேட்டுக்கடை அருகே உள்ள சீரப்பள்ளம் பகுதியில் போனபோது, பலத்த மழை பெய்ததால், சீரப்பள்ளம் ஓடையில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் இடது புறமாக செல்ல முடியாமல் காரை வலதுபுறமாக டிரைவர் தினகரன் திருப்பியுள்ளார்.
அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த அரசுப் பேருந்து, கார் மீது மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். இவர்களில் ஜெகன்னாதனைத் தவிர மற்ற 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குத்துயிரும், குலையுருமாக கிடந்த ஜெகன்னாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.