வாலிபர் கொலை: ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு
நாகர்கோவில்: நெல்லையை சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்டது குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் பேட்டையை சேர்ந்தவர் மசூது. ஏலச்சீட்டு நடத்தி வந்த இவருக்கு திருமணமாகி அசனம்மாள் என்ற மனைவியும் உஸ்மான் என்ற மகனும், ஷகீர்தா பானு என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி தனது நண்பர் கல்யாணி என்பவருடன் சேர்ந்து கன்னியாகுமரி செல்வதாக கூறிய மசூது கடையநல்லூரில் இருந்து ஒரு காரை வாடகைக்கு எடுத்து சென்றார்.
ஆரல்வாய் மொழி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்த சொன்ன கல்யாணியும், மசூதுவும் டிரைவர் கிருண்ஷமூர்த்தியை கட்டி போட்டு விட்டு காரை கடத்தி சென்றனர்.
பின்னர் அதே காரில் சென்று விருதுநகரை சேர்ந்த வியாபாரி ஒருவரை அரிவாளால் வெட்டி ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.
இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி மசூது, கல்யாணி ஆகியோரை 2005ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி கைது செய்து விசாரணைக்காக நாகர்கோவில் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தனிப்படை போலீசார், விருதுநகர் வியாபாரியிடம் கொள்ளையடித்தது தொடர்பாக மசூதுவை கீரிப்பாறை மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விசாரிக்கும்போது இறந்து விட்டதாக தெரிகிறது. ஆனால் போலீசார் கல்யாணியை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, விசாரணை முடிந்து வரும்போது மசூது தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் மசூது பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவரது மனைவி அசனம்மாள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு செய்தார். அதில் தனது கணவரை போலீசார் அழைத்து சென்று அடித்து கொன்று விட்டதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பத்மனாபபுரம் ஆர்டிஓ விடுத்துள்ள அறிக்கையில், முகமது மசூது என்பவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி மாயமானது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி வருகிற 27 மற்றும் 28 ஆகிய 2 நாள்கள் பத்மனாபபுரம் ஆர்டிஓ முன்னிலையில் விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக சாட்சியம் அளிக்க விரும்புபவர்கள் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications