நக்சலைட்டுகளை ஒடுக்க மாநிலங்களில் தனிப்படை - பிரதமர் யோசனை
டெல்லி: நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை ஒடுக்க ஒவ்வொரு மாநில அரசும் தனி அதிரடிப்படையை உருவாக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த முதல்வர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இடதுசாரி தீவிரவாதம் வைரஸ் போல பரவி வருகிறது. தீவிரவாதத் தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க புலனாய்வு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலமும், நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை ஒடுக்க தனிப்படைகளை அமைக்க வேண்டும்.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
நக்சலைட்டுகளின் அட்டகாசம் பல மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. இடதுசாரி தீவிரவாதம்தான் நாட்டின் மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என நான் முன்பே தெரிவித்துள்ளேன். இப்போதும் அதே எச்சரிக்கையை விடுக்கிறேன். இது வைரஸ் போல பரவி வருகிறது. இதைத் தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதுவரை ஓய முடியாது.
நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை ஒடுக்க மாநில அரசுள் அமைக்கும் அதிரடிப்படைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
நக்சலைட் வேட்டையின்போது மாநில அரசுகள் இணைந்து செயல்படலாம். தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
அப்பாவி மக்களை நக்சலைட்டுகள் கொல்வதும், பணம் பறிப்பதும், கடத்துவதும் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்றார் சிங்.