விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு - இளங்கோவன் கவலை
சென்னை: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பது கவலை தருவதாக மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
அமைச்சர் இளங்கோவனுக்கு இன்று 60வது பிறந்த நாளாகும். இதையொட்டி இன்று சென்னையில் தனது பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிரித்து விட்டது. இதைத் தடுக்க முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எனவே ரவுடிகள் அட்டகாசத்தையும், தீவிரவாதிள் நடமாட்டத்தையும் முதல்வர் கருணாநிதி இரும்புக் கரம் கொண்டு அடக்குவார் என எதிர்பார்க்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடர்ந்து விடுதலைப்புலிளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் சனிக்கிழமை பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வரவும், காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும் கட்சித் தொண்டர்கள் அயராது பாடுபட்டுக் கொண்டுள்ளனர். அது நிச்சயம் நிறைவேறும் என்றார் இளங்கோவன்.
முன்னதாக இளங்கோவனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக துணைத் தலைவர் குமாரவேலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனம், எம்.எல்.ஏ வசந்தகுமார், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தனது வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் பிரமாண்ட கேக்கையும் வெட்டினார் இளங்கோவன். 200 பெண்களுக்கு இலவச சேலைகளையும் அவர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications