அன்புமணியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சக்திகள் - ராமதாஸ்
திண்டிவனம்: மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அன்புமணி இளம்வயதில் சாதனைகளுக்கு சொந்தக்காரராக ஆகிவருவதை பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு எதிரான சக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி வயதில் இளையவர், 3 வருடத்தில் அளப்பறிய சாதனைகளை அவர் செய்து வருவதை உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச
அமைப்புகள் பாராட்டி உலக அளவிய விருதுகளை வழங்கி பாராட்டி வருகிறது. இந்தியாவிற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.
மிகமிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் இளம்வயதில் இத்தகைய சாதனைகளுக்கு சொந்தக்காரராக ஆகிவருவதை பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு எதிரான சக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதனால் மீண்டும் மீண்டும் பாமக மீதும் குறிப்பாக அமைச்சர் அன்புமணி மீதும் இந்த இயக்கத்தை சார்ந்த நிறுவனங்கள் மீதும் சேற்றை வாரி வீசத் தொடங்கியிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள ஒரு தலையங்கத்தில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்த முழு விவரங்களை சேகரித்து அந்த நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், அதற்கு நான் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
அரசு நிலத்தை தனிப்பட்டவர்களும், தனிப்பட்ட நிறுவனமே ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்ற புகார் எனக்கு தெரிந்தவரையில் அரசியலில் 1970ம் ஆண்டுகளிலேயே எழுந்திருக்கிறது. 1980ம் ஆண்டுகளில் தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு பின்னர் இத்தகைய புகார்கள் அதிகமாக தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது.
எங்களை விசாரியுங்கள்:
இதுபற்றிய உண்மைகள் நாட்டுக்கும், மக்களுக்கும், தெரிந்தாக வேண்டும். எனவே அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு என்ற புகார் எழுப்பப்பட்ட 1970ம் ஆண்டுகளில் இருந்து இன்று வரையில் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு மாநிலம் தழுவிய அளவில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.
அப்படி விசாரணை நடத்தப்பட்டால் நீதி விசாரணை கமிஷன்கள் நியமிக்கப்பட்டால் விசாரிக்கப்பட வேண்டிய முதல் புகாராக வன்னியர் கல்வி அறக்கட்டளை மீது கூறப்பட்டிருக்கும் புகாரை விசாரணைக்கு ஆட்படுத்திக் கொள்ள நாங்கள் தயார் என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லியில் முடிந்துள்ள முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள சில கருத்துக்கள் வரவேற்கதக்கவை.
மாநிலங்களில் மத்திய அரசு நிறைவேற்றுகின்ற திட்டங்களுக்கும், அந்த திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஆகும் செலவை மாநில அருசம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதை கருணாநிதி எதிர்த்து இருக்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும்.
நிதி ஆதாரங்களுக்காக மாநில அரசுகள் மிகவும் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தையும் மாநில அரசுகள் இழந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் மத்திய திட்டங்களுக்கு ஆகும் செலவை மாநில அரசுகளும் பங்கேற்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.
கேரளாவுடன் பேசிப் பலன் இல்லை:
முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநில முதல்வர்கள் டெல்லியில் பேசியிருக்கிறார்கள். ஆனால் முடிவு எதுவும் ஏற்படவில்லை. இத்தகைய பேச்சுவார்த்தைகளால் முடிவு ஏற்படாது, பலனும் கிடைக்காது. 5 மாநில முதல்வர்களை அழைத்து பேசி முடிவெடுத்தால் தான் இந்த சிக்கலை தீர்க்க முடியும்.
நதிநீர் அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என்று மாநிலங்கள் நினைப்பதால் தான் நதிநீர் சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த விஷயத்தில், வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் அதிக சுயநலம் உள்ளது. சுயநலத்தை மறந்து செயல்பட்டால் முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற நதிநீர் சிக்கல்களை எளிதாக தீர்த்துவிட முடியும்.
நாங்கள் எடுத்து வைக்கும் கருத்துக்கள் குற்றச்சாட்டுகள் கிடையாது. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தான். தொடர்ந்து அந்த பணியை செய்வோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications