மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் - விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்து தவிக்கின்ற விவசாயிகளுக்கு தமிழக அரசு விரைவாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகம் முழுவதும் வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடி, உயரிகளுக்கும், உடைமைகளுக்கும் பெரியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விளைச்சலை இழந்து தவிக்கின்ற விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்து வாடும் ஏழை, எளிய மக்களுக்கும் தமிழக அரசு உடனடி நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன. நிலக்கடலை பயிரிட்டவர்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் முற்றிலும் அழிந்துவிட்டது.
தஞ்சை, விருத்தாசலத்தில் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிவதால் விளை நிலங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளை இழந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறு வியாபாரிகளும் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
வீட்டை இழந்தோர், விளைப்பயிர்களை இழந்தோர், வியாபாரக் கடைகளை இழந்தோர், வேலை இழந்தவர்கள் என அனைத்து தரப்பில் உள்ள மக்களையும் கணக்கெடுத்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண தொகைகளையும், மீண்டும் தொழில் தொடங்க தேவையான முதலீடும், வீட்டை கட்டிக்கொள்ள உதவித் தொகையும், இலவச அரிசி போன்ற அத்தியாவசிய பண்டங்களையும் தமிழக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கு பொது சுகாதார துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நிவாரண உதவிகள் கட்சி அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படாமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.