மோடி ஆதரவாளர்களின் கலக்கல் எஸ்.எம்.எஸ்.
காந்திநகர்: இப்போதும் நான் சி.எம்., எப்பவுமே நான் சி.எம். என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கால் பாஜக 4வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடி 3வது முறையாக முதல்வராக தயாராகி வருகிறார்.
இதையடுத்து மோடியின் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் பாஜகவின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
மோடி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வருகின்றனர். கேஷுபாய் படேல் பதவியிலிருந்து விலகிய பின்னர் மோடி முதல்வர் பதவியை ஏற்றார். அவர் பதவியேற்ற நாள் 7.10.2001.
அதன் பின்னர் நடந்த அந்தக் கூட்டத்தில் மோடி பேசுகையில், 7.10.2002 அன்று நான் முதல்வர் ஆகவில்லை. எப்போதுமே நான் சி.எம்.தான். இன்று சி.எம். ஆக இருக்கிறேன். நாளையும் சி.எம். ஆக இருப்பேன். எப்போதுமே சி.எம். ஆக இருப்பேன். என்னைப் பொறுத்தவரை சி.எம். என்பது 'காமன் மேன்' என்று பொருள், முதல்வர் என்று பொருள் அல்ல என்று பேசியிருந்தார் மோடி.
இப்போது குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பேச்சையே எஸ்.எம்.எஸ். மூலம் பாஜகவினர் அனுப்பி வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த எஸ்.எம்.எஸ். இன்று காலை அனுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications