பாளை. சிறையில் மீண்டும் செல்போன்கள் சிக்கின
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் நடத்திய சோதனையில் மீண்டும் செல்போன்கள், சிம் கார்டுகள், சார்ஜர்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 ஆயிரத்து 500 கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் கடந்த 6 மாதங்களில் சுமார் 45 செல்போன்கள், 20 செல்போன் பேட்டரிகள், 30 ப்ரீபெய்டு சிம்கார்டுகள், 15 செல்போன் சார்ஜர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து சிறைத்துறை உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் பாளை மத்திய சிறையில் உள்சிறை மற்றும் வெளிசிறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன், ஜெயிலர்கள் நீஜாமுதின், அமிர்தலால், மற்றும் சிறை காவலர்கள் 50 பேர் நடத்திய இச்சோதனையில் உள்சிறையில் தண்டனை கைதிகள் உள்ள பிளாக், 2 மற்றும் 3வது பிளாக் அருகேயுள்ள கழிவறை அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 செல்போன்கள், 2 செல்போன் சார்ஜர்கள், 2 சிம்கார்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதனையடுத்து உள்சிறையில் விசாரணை கைதி பானுகுமாரிடமிருந்து ஒரு செல்போன், ஒரு சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். சிறையில் பலரிடம் செல்போன்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தீவிர சோதனை நடத்த சிறை துறையினர் முடிவு செய்துள்ளனர்.
எப்போது சோதனை நடந்தாலும் ஜெயிலுக்குள் புதையல் போல் செல்போன்கள் சிக்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் செல்போன்கள் புழக்கத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளை போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications