விடுதலைப் புலிகள் விவகாரம்: ஜெ.வுக்கு திருமா கண்டனம்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தரும் விவகாரம் தொடர்பாக தன்னை விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசியிருப்பது சுத்தப் பொய், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நானும், முதல்வர் கருணாநிதியும் பேசி வருவதாக ஜெயலலிதா பச்சைப் பொய்யைக் கூறியுள்ளார். அவரது பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
திமுக ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததில்லை. விடுதலைப் புலிகளைக் கண்டித்து பலமுறை முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார்.
சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் அந்த இயக்கத்தை திமுக அரசு ஆதரிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு தருவது என்பதற்கும், தார்மீக ஆரவு தருவதற்கும் உள்ள வித்தியாசத்தை ஜெயலலிதா உணர வேண்டும்.
மேலும், ஈழத் தமிழர்களுக்கு மானசீக ஆதரவு தருவதும், அனுதாபம் காட்டுவதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு ஆதரவு தருவதாக ஆகாது என்று பொடா மறு ஆய்வுக் குழு கூறியுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியது, அந்த அமைப்புக்கு ஆதரவான நிலை என்று கருத முடியாது. அது ஒரு மனிதாபிமான வெளிப்பாடு.
கருத்துச் சுதந்திர எல்லைக்கு உட்பட்டுத்தான், விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் மானசீக ஆதரவு தருகிறோம்.
தமிழர்களைக் கொல்லும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்துப் பேசுவோரையும், உயிரிழந்த அப்பாவித் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுவோரையும் ஜெயலலிதா விமர்சிப்பது அவரது பாசிச மனப்பான்மையைத்தான் காட்டுகிறது.
ஜெயலலிதாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து மனிதாபிமான சக்திகளையும் திரட்டி ஜனவரி 25ம் தேதி சென்னையில் மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக கைதான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் அதே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட கருணாநிதிதான் காரணம் என ஜெயலலிதா கூறியிருப்பதை நான் மறுக்கிறேன். அந்தக் குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்தே நான் விலகத் தயார் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications