சட்டசபை பாஜக தலைவராக ஒருமனதாக மோடி தேர்வு - நாளை பதவியேற்பு
காந்திநகர்: குஜராத் முதல்வராக, 3வது முறையாக நாளை பதவியேற்கவுள்ளார் நரேந்திர மோடி. இன்று காலை நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை பாஜக தலைவராகவும் அவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று காலை நடந்தது.
காந்திநகர், டவுன்ஹால் அரங்கில் நடந்த இக்கூட்டத்தில் 117 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இதில், சட்டசபை பாஜக தலைவராக நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து நாளை முதல்வராகப் பதவியேற்கிறார் மோடி. நாளை பிற்பகல் 12.50 மணிக்கு காந்திநகர் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் நவல் கிஷோர் சர்மா, மோடிக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார் என்று பாஜக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முன்னாள் பிரதமரும், மோடியின் குருவுமான வாஜ்பாயின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, 27ம் தேதி பதவியேற்பதாக இருந்த மோடி முன்கூட்டியே நாளை பதவியேற்க முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications