ஊட்டியில் சாலை, வீடுகளில் பிளவு - மக்கள் பீதி
ஊட்டி: ஊட்டியில் நேற்று திடீரென சாலையில் பெரும் பிளவு ஏற்பட்டது. வீடுகளிலும் விரிசல் விட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
ஊட்டி அருகே உள்ளது மேல்தலையாட்டு மந்து என்ற கிராமம். இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. மேலும் ஏராளமான கெஸ்ட் ஹவுஸ்களும் உள்ளன.
இந்த நிலையில், அண்ணா நகர், மூலன் நகர் பகுதியில் திடீரென 2 நாட்களுக்கு முன்பு நிலத்தில் திடீரென பிளவு ஏற்பட்டது. சாலையில் நீண்ட தூரத்திற்கு பிளவு ஏற்பட்டது. பல வீடுகளிலும் கூட விரிசல் ஏற்பட்டது.
இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். மேலும் பிளவு ஏற்பட்டபோது பெரும் சப்தமும் கேட்டதால் மக்கள் பெரும் பரபரப்படைந்தனர். என்ன ஏது என்று தெரியாமல் குழம்பிப் போய் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
இதுகுறித்து உள்ளூர் தாசில்தார், பூகோளவியல் நிபுணர்களுக்குத் தகவல் போனது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பிளவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.
பிளவு ஏற்பட்டுள்ள சாலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பிளவு ஏற்பட என்ன காரணம் என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.