தேமுதிகவை ஒடுக்கப் பார்க்கிறது திமுக - விஜயகாந்த்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 20வது நினைவு தினத்தையொட்டி மதுரை நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தேமுதிக - அதிமுகவினரிடையே நேற்று மோதல் மூண்டது. இதுதொடர்பாக தேமுதிகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் திமுகவின் திட்டமிட்ட சதி என்று விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், மதுரையில் மறைந்த எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு திமுகவே காரணம். திமுக அரசுதான் இந்த மோதலுக்கான சதியைத் தீட்டி அரங்கேற்றியுள்ளது.
கடமை தவறிய போலீஸ்:
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க வருவார்கள் என்பது தெரிந்திருந்தும் போலீஸார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவில்லை.
பாதுகாப்பு கொடுப்பதற்குப் பதிலாக, தேமுதிகவினரும், அதிமுகவினரும் ஒரே நேரத்தில் மாலை போட அனுமதித்து, மோதலுக்கு வழிவகுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை போலீஸார் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். இரு கட்சியினருக்கும் தனித் தனியாக நேரம் ஒதுக்கி மாலை போட ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் போலீஸார் அதைச் செய்யவில்லை.
இந்த மோதலுக்குப் பின்னர், பொதுமக்கள் புகார் கொடுத்ததாக கூறி தேமுதிகவினரை வேண்டும் என்றே கைது செய்துள்ளனர். ஆனால் மோதிக் கொண்ட இரு கட்சியினர் சார்பிலும் எந்தப் புகாரும் கொடுக்கப்படாத நிலையில், தேமுதிகவினரை கைது செய்திருப்பது வியப்பளிக்கிறது.
திமுகவின் திட்டமிட்ட சதி:
எனது கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அந்த சதித் திட்டத்தின் கீழ் தான் தேமுதிகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் சிலைகள் உள்ளன. அங்கெல்லாம் மாலை போடும் நிகழ்ச்சிகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடிந்துள்ளன. ஆனால் மதுரையில் மட்டும் மோதல் மூண்டுள்ளது. இது பல்வேறு சந்தேகத்தை எழுப்புகிறது. திமுகதான் இதற்குப் பின்னால் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
பொய்யான புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தேமுதிகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார் விஜயகாந்த்.
நல்ல செய்ததால் மோடிக்கு வெற்றி:
குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றி பெற்றது குறித்து கேட்டதற்கு, நரேந்திர மோடியின் செயல்பாடுகளைப் பார்த்துத்தான் அம்மாநில மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். முழுக்க முழுக்க இது அரசின் செயல்பாட்டைப் பார்த்து போடப்பட்ட ஓட்டு அது.
குஜராத் மக்களுக்கு நல்லது செய்ததால் அவர் வெற்றி பெற்றுள்ளார். மதத்தை வைத்து அரசியல் கட்சிகள் சண்டை போடக்கூடாது. எனவே தான் நாங்கள் 3 மத விழாக்களை கொண்டாடுகிறோம். இதே போன்று
எல்லா கட்சிகளும் கொண்டாட வேண்டும்.
முதலில் வரும் கட்சியுடன் கூட்டணி:
தேமுதிகவை பொறுத்தவரை தனித்தே போட்டியிடுவோம் என்று ஆரம்பத்தில் இருந்து நான் கூறி வருகிறேன். எங்கள் தலைமையை ஏற்று கூட்டணி அமைக்க யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.
முதலில் எந்த கட்சி வருகிறது என்று பார்ப்போம். அதன் பின்னர் யோசிப்போம்.
அவராகவே வந்தார், அவராகவே போனார்:
பேராசிரியர் பொன்னுசாமி அவராகவே எங்கள் கட்சிக்கு வந்தார். இப்போது அவராகவே சென்றிருக்கிறார். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றார் விஜயகாந்த்.
மனைவியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:
முன்னதாக கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் பாரிமுனையில் உள்ள அந்தோணியார் ஆலயத்திற்கு சென்று கேக் வெட்டி கிருஸ்துவர்களுடன் கிருஸ்துமஸ் கொண்டாடினார்.












Click it and Unblock the Notifications