எங்களை விமர்சிக்க இளங்கோவனுக்கு அருகதை இல்லை - வரதராஜன்
சென்னை:இடதுசாரிகளை விமர்சனம் செய்ய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எந்த அருகதையும், தகுதியும் கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசியலிலும், காங்கிரஸ் கட்சியிலும் தனக்கென்று எந்தவித சொந்த அடையாளமும் இல்லாதவர் இளங்கோவன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தரும் முடிவை அவரைக் கேட்டு எடுக்கவில்லை.
கூட்டணிக்கான ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் விலக்கிக் கொள்ளட்டும் என இளங்கோவன் கூறுவதில் ந்த அர்த்தமும் கிடையாது. அதற்கான அருகதையோ, தகுதியோ, அதிகாரமோ அவருக்கு சுத்தமாகக் கிடையாது.
மத்திய அரசுக்கு இடதுசாரிகள் அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்கிற தகவல்கள் ஊடகங்கள் எழுப்புகிற பிரச்சனையாக மட்டுமே இருக்கிறது.
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கூட்டுக்குழுவில் மட்டுமே முடிவு எடுக்கப்படும். அந்த முடிவுக்கு இணங்க மத்திய அரசு செயல்படும் என்பதை காங்கிரஸ் தலைமை
ஏற்றுக் கொண்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரணாப் முகர்ஜி வெளியிட்டிருக்கிறார்.
எனவே அணுசக்தி விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் மீது இளங்கோவன் எரிச்சல்படுவதில் எந்த நியாயமும் இல்லை என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications