இனி இந்துக் கோவில்கள் இடிக்கப்படாது: மலேசிய பிரதமர்
மலேசிய தமிழர்களின் சமீபத்திய கோரிக்கைகளை மலேசிய அரசு திட்டவட்டமாக நிராகரித்து வந்தது. மேலும் தமிழர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் அது எடுத்தது. இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகள் ஐந்து பேர் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
மலேசிய அரசின் இந்த நடவடிக்கைகள் அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கருத்து எழுந்தது. மேலும் அமெரிக்க அரசும் மலேசியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. வர்த்தகத் தடை விதிக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அமெரிக்கா எச்சரித்தது.
இதையடுத்து இறங்கி வந்த படாவி, கைது செய்யப்பட்ட 31 தமிழர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற உத்தரவிட்டார்.
தற்போது தமிழர்களை சமாதானப்படுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையில் அவர் இறங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து இனிமேல் மலேசியாவில் எந்த இந்துக் கோவிலும் இடிக்கப்பட மாட்டாது என அவர் அறிவித்தார்.
இதுதவிர, இந்துக் கோவில்கள் சட்டப்பூர்வமாக கட்டப்பட்டதா, இல்லையா என்பதை ஆய்வு செய்ய மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், தொழில்துறை அமைச்சருமான டத்தோ சாமிவேலு தலைமையிலான குழு ஒன்றையும் படாவி அமைத்துள்ளார்.
இதுகுறித்து டத்தோ கூறுகையில், பிரதமரின் உத்தரவுப்படி செயல்படுவேன். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இந்துக் கோவில்கள் குறித்த விவரங்களை சேகரிக்கவுள்ளேன். இது மதப் பிரச்சினை என்பதால் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
நான் சேகரிக்கும் தகவல்களை அமைச்சரவை கூட்டத்தில் வைத்து அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
தமிழ் கட்சிகளின் புது கூட்டணி:
இதற்கிடையே, மலேசியாவைச் சேர்ந்த இந்தியர்கள் கட்சிகளான மலேசிய இந்திய காங்கிரஸ், மக்கள் முன்னேற்ற கட்சி, இந்தியர்கள் முன்னேற்ற முன்னணி ஆகியவற்றின் இளைஞர் அணிகள் இணைந்து இந்தியர்களின் கோரிக்கை குறித்து ஆராய கமிட்டி ஒன்றை அமைத்துள்ளன.
இதுகுறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவர் விக்னேஸ்வரன் கூறுகையில், இந்தக் கமிட்டியில் நான், மக்கள் முன்னேற்றக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முருகய்யா, இந்தியர்கள் முன்னேற்ற முன்னணியின் இளைஞர் பிரிவு தலைவர் ரவிசங்கர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளோம்.
தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் முதல் மிகப் பெரும் பிரச்சினைகள், குறைகள் வரை அனைத்தையும் இந்தக் கமிட்டி ஆராயும்.
இந்தப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பது குறித்தும் நாங்கள் ஆராயவுள்ளோம்.
அரசு வேலைகளில் இந்தியர்களை அதிக அளவில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் முக்கியமாக ஆராயவுள்ளோம். மேலும் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகள் குறித்தும் ஆராயவுள்ளோம் என்றார்.