கோவையில் 11 பீகார் கொள்ளையர்கள் கைது
கோவை: பீகாரைச் சேர்ந்த 11 பேர் கொண்ட பயங்கர கொள்ளைக் கும்பலை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர். லால் பாபு பிரசாத் என்பவரது தலைமையில் தமிழகத்திறகுள் ஊடுறுவிய கும்பல் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள விஜயா லாட்ஜ் என்ற விடுதியில் ஒரு கும்பல் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் சென்றனர். அங்கு தங்கியிருந்த 11 பேரையும் வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் லால் பாபு பிரசாத் என்பவரின் பெயரில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
லால்பாபு பிரசாத் நக்சலைட் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 11 பேரும் நக்சலைட்டுகளாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகப்பட்டனர்.
ஆனால் போலீஸாரின் விசாரணையில் 11 பேரும் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் தமிழகத்திற்கு வந்துள்ளதாக தெரிய வந்தது.
லால் பாபு பிரசாத் தலைமையில் மொத்தம் 50 பேர் பீகாரிலிருந்து வந்துள்ளனர். இவர்கள் 6 பிரிவுகளாக பிரிந்து தமிழகம் முழுவதும் சென்றுள்ளனர். பெரிய பெரிய மின்னணுப் பொருள் விற்பனைக் கடைகள், செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை இக்கும்பல் திருடியுள்ளது.
இப்படித் திருடும் பொருட்களுடன் ஒருவரை மட்டும் பீகாருக்கு திருப்பி அனுப்பி வைப்பார்களாம்.
டிப்டாப்பாக உடையணிந்தபடி வலம் வரும் இக்கும்பல் பகல் நேரங்களில் வணிக நிறுவனங்களை நோட்டம் விட்டுக் கொண்டு இரவில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது வழக்கமாம்.
சமீபத்தில் கூட இதுபோன்ற ஒரு கும்பல் நெல்லை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையிலும் கூட பீகாரிலிருந்து பெரும் கும்பலே தமிழகத்திற்கு கொள்ளையடிக்க வந்திருப்பதாக தெரிவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.
11 பேர் கொண்ட பயங்கரக் கொள்ளைக் கும்பல் பிடிபட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கட்டுமானத் தொழில், பால வேலைகள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருக்கும் பீகார் மற்றும் வட மாநில தொழிலாளர்களிடம் விசாரிக்கவும், அவர்களின் புகைப்படங்களை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையம் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.