பெண்ணின் ஜாக்கெட்டை கிழித்து போலீஸார் அட்டகாசம்
நெல்லை: நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே இளம் பெண்ணின் ஜாக்கெட்டை கிழித்து அநாகரீகமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் மீது பாதிக்கப்பட்ட பெண், கிழிந்த ஜாக்கெட்டுடன் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்துப் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணான பகவதி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷிடம் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது
சீவலப்பேரி அருகே உள்ள மேட்டுக்குப்பக்குறிஞ்சி கிராமத்திற்கு எனது கணவர் முருகன் நாட்டாண்மையாக உள்ளார். அங்குள்ள பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் 10 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்தார்.
இந்த வீடுகள் 2 மாதத்திற்குள் இடிந்து விழுந்து விட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் எனது கணவர் தலைமையில் கடந்த 5-11-2007 அன்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம், அவரது மகன் ரவி உள்பட 6 பேர் கடந்த தீபாவளி அன்று ஆயுதங்களுடன் வந்து எனது வீட்டை சூரையாடினர். இதை தடுத்த திமுக செயலாளர் கசமுத்து படுகாயமடைந்தார்.
ஆனால் சீவலப்பேரி போலீசார் கசமுத்து உள்பட 7 பேர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். மேலும் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் எனது கணவர் மீது கொடுத்த பொய் புகாரின் பேரில் சீவலப்பேரி இன்ஸ்பெக்டர் ஓவுரெட்டி மற்றும் 4 போலீசார் அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்து என்னிடம் அவதூறாக பேசினர்.
அப்போது போலீசார் என்னை கீழே தள்ளி மிதித்ததால் எனது ஜாக்கெட் கிழிந்தது. இதன்பிறகு போலீசார் எனது மகள் சண்முகத்தாயையும் தாக்கி விட்டு எனது கணவரை விசாரணைக்கு அழைத்து சென்று வி்ட்டனர்.
எனவே பொய் வழக்கு கொடுத்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் என்னை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் பகவதி நிருபர்களிடம் கூறுகையில், எந்த தவறும் செய்யாத எனது கணவரை அடித்து சித்ரவதை செய்த இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பகவதிக்கு ஆதரவாக அந்த கிராமத்தை சேர்ந்த 25 பெண்கள் உள்பட 50 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இளம்பெண் கிழிந்த ஜாக்கெட்டுடன் மனு கொடுக்க வந்திருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications