வடிவேலு மீது தாக்குதல்: விஜயகாந்த் டிரைவருக்கு முன்ஜாமீன்
சென்னை: நடிகர் வடிவேலு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் கார் டிரைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடிகர் வடிவேலுவின் அலுவலகம் முன்பு விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள் கார்களை நிறுத்தியிருந்தனர். இதுதொடர்பாக வடிவேலுவுக்கும், அவர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னர் அடிதடியானது.
வடிவேலுவும், அவரது அலுவலகமும் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் விஜயகாந்த்தின் மேலாளர், கார் டிரைவர் உள்ளிட்ட 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கார் டிரைவர் முருகன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வேணுகோபால், முருகனுக்கு ரூ. 5000 ரொக்க ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
விசாரணை நடந்து வரும் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு தினசரி ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.