For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளால் தமிழகத்துக்கு ஆபத்து- எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைப் புலிகளால் தமிழகத்துக்கு அதிக ஆபத்துகள் உள்ளன என்று சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்த தடை தற்போது நடைமுறையில் இல்லை எனக்கூறி ஒரு பொய்யான பிரசாரம் நடத்தப்படுகிறது. புலிகள் மீதான தடை அப்படியே நீடிக்கிறது. 1992 மே மாதத்தில் புலிகளின் மீதான தடையை மத்திய அரசு விதித்தது.

அதிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

புலிகள் இயக்கத்தினர் போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புலிகளால் தமிழகத்துக்கு அதிக ஆபத்துகள் உள்ளன.

தமிழகத்தில் உச்சிப்புளி, ராமேஸ்வரம், சென்னை போன்ற பல பகுதிகளில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைதாகி உள்ளனர். புலிகளின் விசைப் படகுகளுக்கு உதிரி பாகங்களை கடத்த முயற்சித்தவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். தமிழகத்தை போன்ற மாநிலம் அங்கும் அமைய வேண்டும் என்பதே எங்களின் நிலையாகும்.

தமிழகத்தில் பல இடங்களில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. காவல்துறையின் நடவடிக்கை மட்டுமே தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவராது. மாறாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதன் மூலமே இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

இதற்கென இளைஞர் ஆணையத்தை உருவாக்க வேண்டும். அந்த ஆணையத்தின் மூலம் இளைஞர்களையும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதையும் கண்காணிக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. நடைபெறும் தொடர் கொலைகள் போன்ற குற்றச் சம்பவங்களில் காவல்துறை முனைப்புடன் புலன் விசாரணைகள் நடத்துவதில்லை. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதும் கிடையாது. காவல்துறையின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக இல்லை.

மின்வெட்டு கவலை அளிக்கும் பிரச்சனையாக விசுவரூபம் எடுத்துள்ளது. நல்ல மழை பெய்து, நீர்த்தேக்கங்கள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படும் சூழ்நிலை உள்ளது. இருந்தும் நீர் மின் நிலையங்களின் மூலம் 2,150 மெகாவாட்டுக்குப் பதிலாக 400 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தியாகிறது.

இதற்குக் காரணம் அந்த மின் நிலையங்கலின் ஜெனரேட்டர்கள் சரிவர பராமரிக்கப்படாததே ஆகும். அறிவிக்கப்படாத மின் வெட்டின் காரணமாக விவசாயிகளும், தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு ரூ.10,000 கோடி அன்னியச் செலவாணியை ஈட்டித் தரக் கூடிய திருப்பூர் நகரம் கடுமையான மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மின் வெட்டுப் பிரச்சனைக்கு உடனே அரசு முடிவு கட்டவேண்டும். இல்லாவிட்டால் தமிழகமே பாதிக்கப்படும்.

கல்வி நிலையம் என்ற பெயரில் பல பெரிய நிறுவனங்கள் அரசு நிலத்தை வளைத்துப் போட்டுள்ளன. நியாயமாகச் செயல்படும் கல்வி நிறுவனங்களை தவிர, மற்றவற்றிடம் இருந்து தனது நிலங்களை அரசு மீட்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உடனே நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும். இதற்குப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் எழாத வண்ணம் இந்த உதவிகள் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான விவர அறிக்கையை உடனே மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் பாலசுப்பிரமணியன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X