புத்தாண்டு: கொண்டாட்டத்திற்கு போலீஸ் கட்டுப்பாடு
சென்னை: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பல்வேறு கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். இவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் 2007ம் வருடம் முடிந்து 2008ம் ஆண்டு பிறக்கிறது.
இதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டைக் கொண்டாட அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
பல ஆண்டுகளாக புத்தாண்டை அமைதியாகக் கொண்டாடி வந்த சென்னைவாசிகள், சமீப காலமாக புத்தாண்டை தடபுடலாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நள்ளிரவில் நகரெங்கும் வாகனங்களில் உலா வந்தும், புத்தாண்டு விருந்துகள், நடன நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் கொண்டாடுகிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்கள், கடற்கரையோர ரிசார்ட்டுகள், பொழுதுபோக்கு கிளப்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடபுடலான புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல மெரீனா கடற்கரைப் பகுதியில் லட்சக்கணக்கானோர் நள்ளிரவில் கூடி பட்டாசுகள் வெடித்தும், வாகனங்களில் வேகமாக சென்றும், சாலைகளில் வருவோர், போவோரிடம் கை குலுக்கியும் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கம்.
ஆனால் இந்த கொண்டாட்டங்களின்போது சில நேரங்களில் பிரச்சினைகள் உருவாகி விடுவதால் சமீப காலமாக புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அதேபோல இந்த ஆண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:
- வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி வாழ்த்து சொல்வது கூடாது.
- வாழ்த்து கூறுவதாக கூறி பெண்களிடம் சேஷ்டை செய்யக் கூடாது.
- இரு சக்கர வாகனங்களில் கண்டிப்பாக இரண்டு பேர் மட்டுமே செல்ல வேண்டும்.
- மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது.
- சாலைகளில் படு வேகமாக வாகனங்களை ஓட்டக் கூடாது.
- புத்தாண்டுக்கு முதல் நாளில் மெரீனா கடற்கரையில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- சாலைகளில் அமர்ந்து மது அருந்தக் கூடாது.
புத்தாண்டுக்கு முதல் நாளான டிசம்பர் 31ம் தேதி மட்டும் அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும் என காவல்துறை அறிவித்துள்ளது.
கோவில்கள், கிறிஸ்தவ பேராலயங்கள், மசூகளில் நள்ளிரவு வழிபாடு நடக்கும் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ம் தேதியன்று இரவு மெரீனா கடற்கரையிலிருந்து நீலாங்கரை கடற்கரை வரை கிட்டத்தட்ட 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications