காஸ் குழாய் வெடிப்பு: 4 பெண்கள் மயக்கம் - மக்கள் பீதி
திருச்சி: திருச்சி அருகே தனியார் காஸ் நிரப்பும் தொழிற்சாலையில் குழாய் வெடித்து காஸ் கசிந்ததில் 4 பெண்கள் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள சன்னாசிப்பட்டி என்ற கிராமத்தில் தனியார் காஸ் நிரப்பும் தொழிற்சாலை உள்ளது.
இன்று இந்த தொழிற்சாலைக்கு லாரியில் வந்த அன்ஹைடிரஸ் அமோனியா என்ற வேதிப் பொருளை, குழாய் மூலம் சேமிப்பு டேங்குக்கு மாற்றினர். அப்போது திடீரென குழாய் வெடித்தது.
இதனால் அமோனியா நெடி காற்றில் கலந்ததால் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு தலைசுற்றலும், மயக்கமும் ஏற்பட்டது. அருகில் உள்ள வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பெண்கள் மயங்கி விழுந்தனர்.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து காஸ் கசிவை நிறுத்துவதற்கு முயற்சி செய்தனர்.
காஸ் கசிவால், அப்பகுதி மக்களிடம் கடும் பீதி ஏற்பட்டது. சன்னாசிப்பட்டி, தெற்கு பாகனூர், இன்னமாத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ளவர்கள் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்றனர்.
தகவல் அறிந்ததும் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதிமுக எம்.எல்.ஏ பரஞ்ஜோதி ஆகியோர் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
தனியார் காஸ் நிரப்பும் ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications