தூத்துக்குடி, தஞ்சையையும் மாநகராட்சி ஆக்க பாமக கோரிக்கை
திருநெல்வேலி: திருப்பூர், ஈரோட்டைத் தொடர்ந்து தூத்துக்குடி, தஞ்சாவூரையும் மாநகராட்சிளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை வந்த ஜி.கே.மணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர், ஈரோட்டை மாநகராட்சியாக்கியுள்ளதை வரவேற்கிறோம். அதுபோலவே, தூத்துக்குடி, தஞ்சாவூரையும் மாநகராட்சிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். தமிழகம் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலம். இதைக் கருத்தில் கொண்டு அரசு நீண்ட கால பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
இதுகுறித்து பொதுப்பணித்துறையின மூத்த மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பொறியாளர்கள் குழுவை அமைத்து நீர்ப்பாசனத்திட்டங்கள் குறித்த மாஸ்டர் பிளானை அரசு தயாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கும் என்றார் மணி.