பிரதமர் இலங்கை போகக் கூடாது - திருமாவளவன் கோரிக்கை
சென்னை: இலங்கை சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங், அங்கு போகக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனவரி 25ம் தேதி மொழிப் போர் தியாகிகள் நினைவு நாளில் சென்னையில் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருத்துரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் மனித உரிமை ஆர்வலர்கள் ஜனநாயக உணர்வாளர்கள் பங்கேற்கிறார்கள்.
ஈழ படுகொலையை கண்டிக்கவோ, இரங்கல் தெரிவிக்கவோ கூடாது என்று பாசிசம் கொண்டு கூக்குரலிடுகிறார்கள். தமிழகத்தில் அரசியல் ஆதாயத்துக்காக தொடர்ந்து இத்தகைய பிரசாரம் நடைபெறுகிறது.
ஈழ விடுதலைக்காகவோ, விடுதலைப் புலிகளுக்காகவோ கருத்துரிமை மீட்பு மாநாடு நடத்தப்படவில்லை.
முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தான் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக ஜெயலலிதா ஆதாரம் இல்லாத பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிட வேண்டும். இவரின் குற்றச்சாட்டு வேதனைக்குரியது.
சிங்கள அரசின் 60வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அழைப்பு வந்துள்ளதாக தெரிகிறது. தமிழ் இன படுகொலையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங்கள இனவாத அரசு நடத்தும் விழாவில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது.
இதை வலியுறுத்தி சென்னையில் திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம்.
சுனாமி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் முடிவு வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications