பாக். தேர்தல் ஒத்திவைப்பு? - மார்ச்சில் நடக்கலாம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது. ஜனவரி மாதத்திற்குப் பதில் மார்ச் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு நாளை முறைப்படி வெளியாகவுள்ளது.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலையால் பாகிஸ்தானே கொந்தளித்துக் கிடக்கிறது. இன்னும் கூட கலவரம் அங்கு அடங்கவில்லை.
ஆயிரக்கணக்கான கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் ஆணைய அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காவல் நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது.
இந்த நிலையில் தேர்தலைத் திட்டமிட்டபடி ஜனவரி 8ம் தேதி நடத்துவது குறித்து பெரும் கேள்விக்குறி எழுந்தது.
இந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. மார்ச் 2ம் வாரத்தில் தேர்தல் நடைபறக் கூடும் எனத் தெரிகிறது. இதுதொடர்பான முறையான அறிவிப்பை பாகிஸ்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் குவாஸி முகம்மது பரூக் வெளியிடுவார் என்று தெரிகிறது.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும், மீண்டும் வேட்பு மனு தாக்கல் நடைபெறாது. தற்போது மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களைக் கொண்டே தேர்தல் நடத்தப்படும்.
பெனாசிர் மரணத்திற்கு இரங்கல் அனுஷ்டிக்கும் வகையில் 40 நாள் துக்கத்தை பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இந்த துக்கம் பிப்ரவரி 10ம் தேதி முடிவுக்கு வருகிறது.
ஜனவரி 11ம் தேதி முதல் முஹர்ரம் தொடங்குகிறது. முஹர்ரம் பிப்ரவரி 22ம் தேதி வருகிறது. மேலும் கல்யாத் பகுதியில் அந்த சமயத்தில் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருக்கும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மார்ச் 2வது வாரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications