விவசாயிகளின் நூதனப் போராட்டம்
திருச்சி: நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதாரத் தொகையாக ரூ. 1000 தர மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்து ஜனவரி 31ம் தேதி முதல் நெல் பயிரிடாமல் நூதனப் போராட்டத்தை நடத்த தமிழ்நாடு தோட்டப் பயிர் உற்பத்தியாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் புலியூர் நாகராஜன் திருச்சியில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ. 1000 நிர்ணயிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால் இதுவரை மத்திய அரசு இதில் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் மெத்தனமாக இருந்து வருகிறது.
மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து ஜனவரி 31ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நெல் பயிரிடுவதை நிறுத்துவது, நில வரியைக் கட்டாமல் நிறுத்துவது, விவசாயக் கடன் பாக்கியை செலுத்தாமல் நிறுத்துவது ஆகிய போராட்டங்களை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து விவசாய ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது என்றும் அதன் மூலம் விவசாயிகளின் உரிமையைப் பெற போராடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி நீரில் தமிழகத்திற்குரியப் பங்கைப் பெற தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.