நாளை கூடுகிறது அதிமுக செயற்குழு
சட்டசபைத் தேர்தல் தோல்வியின் பின்னணியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது. இக்கூட்டத்தில் புதிய அவைத் தலைவராக மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர் கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்குப் பின்னர் நாளை மீண்டும் அதிமுக செயற்குழுக் கூட்டம் கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் கூடுகிறது.
காலை 10 மணிக்கு கூடும் செயற்குழுக் கூட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்குகிறார். அவைத் தலைவர் மதுசூதனன் முன்னிலை வகிக்கிறார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அணி நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக சார்பில் தினசரி பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தப் போராட்டங்களை எதிர்க்கட்சியினர் விமர்சித்த போதிலும் கூட அந்தந்த ஊர்களில் அதிமுக போராட்டங்களுக்கு மக்களிடையே ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவது, நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் வந்தால் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முக்கியமாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
கூட்டணிக்கு அதிமுக தயார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதன் பின்னணியில் பலமான உள்ளர்த்தம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
திமுகவுடன் பாமகவின் உறவு வெகுவாக கசந்து காணப்படுகிறது. இரு கட்சித் தலைவர்களிடையே மட்டும்தான் இப்போது உறவு உள்ளது. தொண்டர்கள் மத்தியில் மனதளவிலும், செயல் அளவிலும் பிரிந்து நெடு நாட்களாகி விட்டன.
மேலும், திமுகவுடன் தற்போது கூட்டணி இல்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்போம், 2011ல் பாமக ஆட்சி அமைக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி வருகிறார்.
எனவே பாமகவுடனான உறவு குறித்து அதிமுக செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை ஜெயலலிதா கேட்டறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாமகவும் தனது செயற்குழுக் கூட்டத்தை வருகிற 24ம் தேதி கூட்டியிருப்பதால் இந்த இரு செயற்குழுக் கூட்டங்களும் அரசியல் அரங்கில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.