For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹோட்டல் மேடை சரிந்த விபத்தில் ஒருவர் பலி

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: சென்னை சவேரா ஹோட்டல் நீச்சல்குளத்தில் போடப்பட்டிருந்த புத்தாண்டுக் கொண்டாட்ட மேடை சரிந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் சவேரா நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக ஹோட்டல் வளாகத்தில் உள்ள நீச்சல்குளத்தின் மீது கட்டைகளைப் போட்டு அதன் மீது பெரிய மேடையை அமைத்திருந்தனர்.

நூற்றுக்கணக்கானோர் அதில் ஏறி நின்று ஜோடி ஜோடியாக ஆடிக் போட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவை நெருங்கிய நிலையில் திடீரென மேடை சரிந்து நீச்சல் குளத்திற்குள் ஜோடிகள் மூழ்கினர்.

உடனடியாக அவர்களை மீட்டு விட்டனர். தண்ணீரில் மூழ்கித் தத்தளித்த 7 பேரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தின் அஜாக்கிரதையைக் கண்டித்து விருந்துக்கு வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர். பணத்தைத் திருப்பித் தரக் கோரி அவர்கள் போராட்டத்திலும் குதித்தனர். அவர்களை போலீஸார் கலைந்து போகுமாறு கூறியபோது பெரும் போதையில் இருந்த சிலர் போலீஸாரைத் தாக்கினர்.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர். நீச்சல் குளத்தில் விழுந்தது, தடியடி ஆகியவற்றில் 30 பேர் காயமடைந்தனர்.

ஒருவர் பலி:

இந்த நிலையில் சரிந்து விழுந்த மேடை கட்டைகளை அகற்றியபோது ஒரு உடல் நீச்சல் குளத்தில் மிதப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி அதை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த நபரின் பெயர் சுமித் அக்னிஹோத்ரி என்று தெரிய வந்துள்ளது. மேடை சரிந்து விழுந்தபோது இவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. சுமித் மேற்கு முகப்பேரைச் சேர்ந்தவர். சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இதேபோல மயிலாப்பூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும், அவரது உறவினர் ரம்யா என்பவரும் படுகாயமடைந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஆனந்த்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் மேலாளர் கைது:

புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் நடந்த இந்த சம்பவம் குறித்து சவேரா ஹோட்டல் நிர்வாகம் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஹோட்டல் மேலாளர் ஆண்டனி மைக்கேல் கைது செய்யப்பட்டார்.

புத்தாண்டில் நடந்த இந்த சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, மேடை அமைக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றிருந்த நரேந்திர சிங் என்பவரின் மேலாளரான ரவி என்பவரை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இவரும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஹோட்டல் மேலாளர் ஆண்டனி மைக்கேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் 304 ஏ (கவனக்குறைவால் மரணம் ஏற்படக் காரணமாக இருப்பது), 337 (ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட காரணமாக இருப்பது), 338 (படுகாயம் ஏற்படுத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X