பாகிஸ்தான் தேர்தல் பிப்ரவரி 18க்கு ஒத்திவைப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டில் இம்மாதம் 8ம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலையால் பாகிஸ்தானே கொந்தளித்துக் கிடக்கிறது. இன்னும் கலவரம் அங்கு அடங்கவில்லை.
ஆயிரக்கணக்கான கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் ஆணைய அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காவல் நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது.
இந்த நிலையில் தேர்தலைத் திட்டமிட்டபடி ஜனவரி 8ம் தேதி நடத்துவது சாத்தியமில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துவிட்டது.
அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் குசி முகம்மது பரூக் கூறியதாவது,
நாட்டில் கலவரம் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் குறிப்பிட்ட ஜனவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடப்பது சாத்தியமில்லை.
கலவரம் முழுதும் ஓய்ந்த பின்னர் தான் தேர்தல் நடத்தப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
எனவே வரும் பிப்ரவரி 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடக்கும் தேதி நாட்டின் நிலவரத்தை பொறுத்து மாறலாம் எனவும் தெரிவித்தார்.