பாஜகவுடன் கைகோர்க்க தயாராகும் அதிமுக - என்.வரதராஜன்
சென்னை: 3வது அணி என்ற பொய்த் திரையை களைந்துவிட்டு, பாஜகவுடன் கைகோர்க்க அதிமுக தயாராகி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
மூன்றாவது அணி என்ற பொய்த் திரையை களைந்துவிட்டு, பாஜகவுடன் கைகோர்க்க அதிமுக தயாராகி வருகிறது. நரேந்திர மோடிக்கு வாழ்த்து, விருந்துக்கு அழைப்பு, டெல்லியில் நடந்த ராமர் பால பாதுகாப்பு மாநாட்டுக்கு வாழ்த்து போன்ற நடவடிக்கைகள் மூலம் ஜெயலலிதா அதற்கான அறிகுறிகளை காட்டியுள்ளார்.
திமுக அரசுக்கு எதிராக அதிமுக தினமும் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், அதன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் மதவெறியை புதுப்பிப்பதுதான் என்று தோன்றுகிறது.
சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய அரசு உறுதியான நிலையை எடுக்கவில்லை. மாநில அரசு இந்த திட்டத்தை உறுதியாக வலியுறுத்த வேண்டும்.
திமுக அரசு உருவானதில் எங்கள் கட்சியின் சிறிய பங்கும் உண்டு என்பதை அடக்கத்துடன் சொல்வோம். கடந்த தேர்தலில் ஜனநாயகமா, சர்வாதிகாரமா என்ற கோஷத்தை முன்வைத்தோம். அதன் தொடர்ச்சியாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஜனநாயகம் வலுப்பெற வேண்டும்.
கூட்டுறவுத் தேர்தலில் முறைகேடுகளை சுட்டிக் காட்டியதும் தேர்தலை தள்ளி வைக்கப்பட்டது. அதனை உடனே நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிமுக ஆட்சியில் 8 சதவீத நிதி வழங்கப்பட்டது. இப்போது 9 சதவீதம் வழங்கப்படுகிறது. ஆனால் கூடுதல் அதிகாரம் வழங்கவில்லை. இதெல்லாம் மாற வேண்டும்.
தமிழகத்தில் மாற்றம் தேவை. 3வது அணிக்கு முயற்சி செய்வோம். பிரச்சனைகள் அடிப்படையில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications