இலங்கை பிடித்துச் சென்ற 28 தமிழக மீனவர்கள் மீட்பு
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களில் 28 பேரை இந்திய கடலோரக் காவல் படை மீட்டுள்ளது. அவர்களின் 3 படகுகளும் மீட்கப்பட்டன.
இதுகுறித்து கடலோரக் காவல் படையின் மண்டபம் முகாம் தலைமை அதிகாரி கமாண்டன்ட் கே.ஜனார்த்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து, காங்கேசன் துறை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து அந்தப் படகுகளை இலங்கை கடற்படை சூழ்ந்து கொண்டது. படகுகளில் இருந்த மீனவர்களை அவர்கள் கைது செய்தனர்.
இதுகுறித்த தகவல் கடலோரக் காவல் படைக்குக் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக கடலோரக் காவல் படை கப்பல் விரைந்து சென்றது. இதைத் தொடர்ந்து கைது செய்யரப்பட்ட 28 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை கடற்படை, சர்வதேச எல்லையில் வைத்து நம்மிடம் ஒப்படைத்தது.
பின்னர் தமிழக மீனவர்களை கோடியக்கரை வரை பத்திரமாக கொண்டு வந்து விட்டது கடலோரக் காவல் படை. அவர்களை தமிழக அரசின் நாகப்பட்டனம் மாவட்ட உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைத்தோம்.
கடலில் நிலவிய மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், கடலோரக் காவல் படை அதிகாரி கைலாஷ் நேகி தலைமையில் சென்ற படையினர் வெற்றிகரமாக மீனவர்களை மீட்டு வந்தனர் என்று ஜனார்த்தன் கூறியுள்ளார்.
இருப்பினும் சம்பத், ராபர்ட், அருண் ஆகிய மூன்று மீனவர்கள் தொடர்ந்து இலங்கை படையினர் வசம் உள்ளனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை இலங்கை அதிகாரிகள் விடுவிக்காமல் தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.