“மின்சார கட்டணம் திடீரென மிக அதிகமாக வந்ததற்கு காரணம் பில்லிங் குறைபாடு” - மின்வாரிய அதிகாரி தகவல்
சென்னை: மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங்கில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் அதிகப்படியான மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நெல்லை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்றும் அறிவித்தார். 500 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு முன்பு போலவே 100 யூனிட் மட்டும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபின், தற்போது வீட்டு நுகர்வோர் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். முந்தைய மாதங்களை விட 2 மடங்கு, 3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணம் வந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 300 ரூபாய் வந்த மின் கட்டணம் இந்த மாதம் 800 ரூபாய்க்கு மேல் வந்திருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். அதிலும் 200 யூனிட் மின்சார கட்டணம் இலவசம் என அறிவித்த போதும் மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் பலர் குற்றம்சாட்டி உள்ளனர்.
வழக்கமாக வெயில் காலங்களில் மின்சார பயன்பாடு அளவு அதிகரிப்பதால் மின் கட்டணம் உயர்வது வழக்கம். ஆனால், இந்த முறை வழக்கத்துக்கு மாறாக மிக அதிக மின்சார கட்டண பில் வந்துள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மின் கட்டணம் வெளிப்படையான அறிவிப்பு இல்லாமல் உயர்த்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
ஆனால், தவெக தரப்பில் மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், மின்சாரம் அதிகம் பயன்படுத்தியதால் தான் கட்டணம் அதிகம் வந்துள்ளது, குறைவாக பயன்படுத்தியவர்களுக்கு கடந்த முறையை விட குறைவாகவே கரண்ட் பில் வந்துள்ளது என்கிறார்கள்.
இந்நிலையில், மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளதாக நெல்லை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், மின்சாரத் துறையின் சில பிரிவுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் அசாதாரணமான பில்லிங் முறைகளால் பொதுமக்களுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மீட்டர் கணக்கீடு அல்லது பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் வீட்டு மின் நுகர்ருவருக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்களுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மின்வாரிய அதிகாரிகளால் மதிப்பீட்டின் அடிப்படைக் கள ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் இடிசி மட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பழுதடைந்த மீட்டரின் மின் அளவுகளில் இருந்து பிரச்சனை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படாமல் பிரிவு அலுவலகத்திற்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் மேற்பார்வை பொறியாளர் சரியான முறையில் பணி செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.














Click it and Unblock the Notifications