பழனி நில மோசடி.. அமைச்சருக்கு தொடர்பிருக்கா? எல்லா ஃபைலும் என் டேபிளுக்கு வரணும்.. விஜய் விசாரணை?
சென்னை: பழனி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் தான், தற்போது அரசியல் பரபரப்பு.. இதன் பின்னணியில் நடந்துள்ள அனைத்தும் எனக்கு வரவேண்டும் என்று தனது செயலாளர்களிடம் கடுமையாக உத்தரவைத்து இருக்கிறார் முதல்வர் விஜய்.
பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரம், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. ₹100 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை ஒரே நாளில் பத்திரப்பதிவு செய்து கொடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கொடைக்கானல் பொறுப்பு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது.

விஜய் விசாரணை
குறிப் பாக, அமைச்சர் ரமேஷ், இதில் சம்மந்தப்பட்டிருக்கிறாரா? உயரதிகாரிகளின் உதவியுடன் தான் இந்த வில்லங்கம் நடந்ததா? என்கிற உண்மையான தகவல்கள் எனக்கு வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் விஜய். இதற்கான முழு ரிப்போர்ட்டை தயாரிப்பதில் முதல்வரின் செயலாளர்கள் சீரியஷாக இயங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 2011-2016 ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நில ஆக்ரமிப்பு மோசடிக்கு எதிரான சட்டத்தின் படி, ஒவ்வொரு மாவட்ட காவல்துறையிலும் நில ஆக்ரமிப்பு சட்டத்தை அமல் படுத்துவதற்காகவே தனிப்பிரிவு இயங்கியது. யாருடைய சொத்தையும் யாரும் ஆக்ரமித்துவிடக்கூடாது ; போலி பட்டாக்கள் வாங்கி அபகரிக்கக் கூடாது ; அப்படி அபகரிக்கும் நபர்கள் மீது கடுமையான கிரிமினல் ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்கிற உத்தரவுகளை பிறப்பித்தவர் ஜெயலலிதா.
விஜய் ஆக்சனுக்கு பிளான்
ஆனால், ஜெயலலிதாவுக்கு பிறகு வந்த எடப்பாடி பழனிச்சாமியும், எடப்பாடிக்கு பின்னால் வந்த ஸ்டாலினும் தங்களின் ஆட்சியில் இந்த நில ஆக்ரமிப்பு தடுப்பு சட்டத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இயங்கி வந்த இந்த தனிப்பிரிவும் முடக்கப் பட்டது. அதாவது இந்த பிரிவு சீரியஷாக இயங்கவில்லை.
பொதுவாக ஆட்சியாளர்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் விவகாரங்களில் தனி நபர்களின் நிலத்தை கிரிமினல்கள் அபகரித்தல், போலி பத்திரப்பதிவுகள் உள்ளிட்ட விசயங்கள்தான் முக்கிய இடத்தில் இருக்கும். அதனாலேயே நில அபகரிப்பிலும் போலி பத்திரப்பதிவுகளிலும் அரசியல் கிரிமினல்களின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ஜெயலலிதா.
கடந்த 10 ஆண்டுகளாக செயலற்று கிடக்கும், நில அபகரிப்புகளை தடுக்கும் சட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுப்பது குறித்தும், மீண்டும் அந்த சட்டப்பிரிவை மாவட்ட காவல்துறையில் அமல்படுத்தவும் முதல்வரிடம் தெரிவிக்க கோட்டை அதிகாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக இணைச் செயலாளர் பரந்தாமன், பழனி நில மோசடி வழக்கில் அரங்கேறியுள்ள திட்டமிட்ட சதிகளை அடுக்கினார்.
அதில், பழனியில் உள்ள ₹100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை வெறும் ₹2 கோடிக்குத் தனியார் நபர்களுக்குப் பினாமி பெயரில் பணப்பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளனர். இந்த ஆவணத்தைப் பதிவு செய்வதற்காக அதிகாரிகள் மட்டத்தில் மிகத் துல்லியமான சதி அரங்கேறியுள்ளது என்பது அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
அதிகாரிகள் மறுப்பும்.. கொடைக்கானல் செட்டிங்கும்
இந்த நிலத்தை எப்படியாவது தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு தரப்பு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுள்ளது. முதலில் பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த சார்பதிவாளர் பழனிச்சாமி என்பவர், இந்தத் தவறான ஆவணங்களைப் பார்த்துவிட்டு நிலத்தைப் பதிவு செய்ய மறுத்துவிட்டார்.
அதன் பின்னர், ஜூலை 3ஆம் தேதி பாலசுந்தரம் என்ற அதிகாரி பொறுப்புக்கு வருகிறார். அவரும் இந்த வில்லங்கமான ஆவணங்களை முழுமையாகப் பரிசீலித்துவிட்டு, 'நான் இந்த நிலத்தைப் பதிவு செய்ய மாட்டேன்' என்று கறாராக மறுத்துவிடுகிறார்.
இப்படி அடுத்தடுத்து அதிகாரிகள் மறுத்த நிலையில், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களைக் கடந்து, திங்கட்கிழமை ஒரு புதிய சார்பதிவாளர் கொண்டு வரப்படுகிறார். சுற்றியுள்ள பக்கத்து ஊர்களில் இருந்தோ அல்லது திண்டுக்கல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தோ அதிகாரிகளை நியமிக்காமல், சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடைக்கானலில் இருந்து ஜஸ்டின் மணிகண்டன் என்ற சார்பதிவாளர் அவசர அவசரமாகப் பழனிக்குக் கொண்டு வரப்படுகிறார்.
நிலத்தைப் பதிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே, இந்தச் செட்டிங் செய்யப்பட்டு அவர் கொண்டு வரப்பட்டார் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.
- சிறப்பு நிருபர் எழில்















Click it and Unblock the Notifications