கோவை வெள்ளலூரில் இனி மலை போல் குப்பை இருக்காது.. வரப்போகுது மாற்றம்.. அமைச்சர் விக்னேஷ்
கோவை: கோவையில் தொழில்துறையினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார். கோவையின் உள்கட்டமைப்பு, தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தொழில் அமைப்புகள் பரிந்துரைகள் வழங்கி, இந்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அவர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் விக்னேஷ், "நான் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தாலும், கோவை மீதும் அக்கறை செலுத்துவேன்.
கோவையின் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மான்செஸ்டர் நகரம் என்கிறோம். சென்னைக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் கோவை உள்ளது. ஆனால் சாலை, குடிநீர், சுகாதாரமான இருப்பிடம் போன்றவற்றை அமைத்து கொடுக்க வேண்டியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு எடுத்த சர்வே அடிப்படையில் தான் ஒவ்வொரு பகுதிக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படி கோவையின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யவுள்ளோம்.

50 வருடங்களில் இல்லாத வளர்ச்சி
நானும், கோவை பொறுப்பு அமைச்சர் சம்பத்குமாரும் அமைச்சர்கள் சேம்பரில் சும்மாவே இருக்க மாட்டோம். கோவைக்கு புதிய திட்டங்களை கொண்டு வருவதற்காக பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்து பேசி கொண்டிருக்கிறோம். நீங்கள் எவ்வளேவோ அரசியல்வாதிகளை பார்த்திருப்பீர்கள், பழகியிருப்பீர்கள். வரும் காலங்களில் கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியடைய போகிறது. 50 வருடங்களில் இல்லாத வளர்ச்சியை வருகிற 5 வருடங்களில் கொண்டு வருவோம்.
திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலையம் திட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இருக்கிறோம். நான் வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகில் தான் வாழ்ந்து வருகிறேன். செவ்வாய்க்கிழமை மஞ்சள் தண்ணீர், புதன்கிழமை வெள்ளை தண்ணீர் வரும் என்று அந்த பகுதி மக்கள் கூறுவார்கள். தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்தும் கூட சரியான குடிநீர் வசதி கூட இல்லாமல் அந்த மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்த பிரச்சனையை சரி செய்ய அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வெள்ளலூர் குப்பை கிடங்கு
அடுத்த வருடம் ஏப்ரல், மே மாதங்களுக்குள் வெள்ளலூரில் மலை போல குப்பை இருக்காது. கூடுதலாக 2,3 மாதங்கள் எடுத்தாலும் பிரச்சனை சரியாவது உறுதி. வெள்ளலூரில் தேங்கியுள்ள குப்பையை பயோ மைனிங் செய்து உரமாக்குவோம். வெள்ளலூர் குப்பை கிடங்கு தற்போது 650 ஏக்கரில் உள்ளது. அதை தற்போது 60 ஏக்கருக்குள் சுருக்குவோம். குப்பை கொட்டப்பட்ட 24 மணிநேரத்தில் அதை சுத்திகரிப்பு செய்வதை இலக்காக வைத்துள்ளோம். மீதியுள்ள இடத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications